ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மே தின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்துப் பேசப்பட்டதா? மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்ககொண்டார்களா?
என்பவை குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.