கொரோனா வைரஸ் தொற்று நோயால் மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்துவரும் இந்தியாவுக்கு தேவையான அவசர உயிர்காப்பு மருத்துவ உபகரணங்களை பிரான்ஸ் அனுப்பவுள்ளது.
ஒக்ஸிஜன் செறிவு கருவிகள், திரவ ஒக்ஸிஜன் கொள்கலன்கள், செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவற்றை பிரான்ஸ் அனுப்புகிறது.
கொரோனா தொற்று நெருக்கடியில் சிக்கியுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இந்தியாவுக்கு 8 ஒக்ஸிஜன் செறிவு கருவிகள், திரவ ஒக்ஸிஜன் கொள்கலன்கள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஒக்கிஜன் செறிவாக்கல் கருவி மூலம் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு தடையில்லாமல் ஒக்சிஜன் வழங்கலாம் அல்லது அதிகம் பாதிக்கப்பட்ட 15 அதி தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்கலாம் அல்லது சிறிதளவு ஒக்சிஜன் தேவைப்படும் 150 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அதேபோல், முதல்கட்டமாக அனுப்பப்படும் ஐந்து திரவ மருத்துவ ஒக்சிஜன் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்க முடியும். இதன் மூலம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவசர மருத்துவ நிலைமைக்கு உதவுவது மட்டுமல்லாமல் இந்திய மருத்துவமனைகளின் கட்டமைப்பும் வலுப்பெறும் என்று பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கப்பல் அல்லது விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு இந்த வார இறுதிக்குள் வந்துசேரவுள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு, இந்தியா