பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை முதல் கடும் மழை பெய்துவரும் நிலையில் அங்கு ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்தனர்.
இடியுடன் கூடிய மழை பெய்தபோது பஞ்சாபின் ஒகாரா நகரின் தாரிக் அபாத் பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர்.
உள்ளூர் மக்களும் மீட்புக் குழுக்களும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்தவர்களில் மூன்று பெண்கள், நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குகின்றனர்.
இதேவேளை, ஒகாரா மாவட்டத்தின் ஹுஜ்ரா ஷா முகீம் பகுதியில் வீதியில் நடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஞ்சாப் - டோபா டெக் சிங் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மற்றொரு நபர் உயிரிழந்தார்.