மூன்று முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை போட சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக சினோவாக் பயோஎன்டெக் நிறுவன தலைவர் யின் வீடோங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோவாக் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் அங்கீகாரம் அளித்தது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்ற சீனாவின் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.
எனினும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்க முன்னரே மில்லியன் கணக்காணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. ஜூன் 3 ஆம் திகதி வரை 723.5 மில்லியன் சினோவாக் தடுப்பூசிகள் சீனா மற்றும் சில நாடுகளில் போடப்பட்டுள்ளன.
இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தத் தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைப் போட சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
வயதானவர்களுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றால் சிறுவர்கள் குறைந்தளவே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் வயதானவர்களுக்கே தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சினோவாக் தடுப்பூசியை 03 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கு போட சீனா ஒப்புதல் வழங்கியுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை சீன அரச தொலைக்காட்சியில் பேசிய சினோவாக் பயோஎன்டெக் நிறுவன தலைவர் யின் வீடோங் கூறினார்.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் 03 முதல் 17 வயதுடைய சிறுவர்களிடையே சினோவாக் தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இதன் பக்கவிளைவுகளும் சிறுவர்களிடையே லேசானவையாகவே இருந்தன எனவும் யின் வீடோங் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா