புர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குறைந்தது 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இதுவென புர்கினா பாசோ அரசு நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் சோல்ஹான் என்ற பகுதியில் உள்ள உள்ளூர் சந்தைகள் மற்றும் வீடுகள் என்பவற்றையும் தீவைத்து எரித்து நாசம் செய்தனர்.
எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.
இதேவேளை, இந்தத் தாக்குதல் குறித்து தான் ஆத்திரமடைந்ததாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறை, தீவிரவாதம் மற்றும் அதன் ஏற்றுக்கொள்ள முடியாத மனித படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் உறுப்பு நாடுகளுக்கான ஆதரவை இரட்டிப்பாக்குவதற்கான சர்வதேச சமூகத்தின் அவசர தேவையை இந்தக் கொடூர தாக்குதல் உணர்த்துக்கிறது என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புர்கினா பாசோ ஜனாதிபதி ரோச் கபோர் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார். தீய சக்திகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக, ஒன்றாக நிற்க வேண்டும் என தனது ருவிட்டரில் அவா் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை இரவு நடந்த மற்றொரு தாக்குதலில் 132-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இடமான சோல்ஹானின் வடக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள தடரியத் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
புர்கினா பாசோ கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலொன்றில் 30 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.