எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் (MVX-Press Pearl) கப்பல் தீவிபத்து தொடர்பான பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவும் நிமித்தம் 100,000 அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அமெரிக்க மக்கள் இலங்கையர்களுக்கு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலானது சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் பிளாஸ்டிக் சிதைவுகளையும் இரசாயன கழிவுகளையும் வெளியேற்றி, கடலோர வளங்களையும் அருகிலுள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.
இந்த உதவியானது தற்போதைய அவசரநிலையினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்கும் என்பதுடன், பதிலளிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பையும் விரிவுப்படுத்தும். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) செயல்படுத்தும் பங்காளர்களின் ஊடாக அமெரிக்கா இந்த உதவியை வழங்குகிறது.
“எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தாக்கங்களை தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது,'' என்று இலங்கைக்கான அமெரிக்க துணைநிலைத் தூதுவர் மார்ட்டின் கெலி தெரிவித்தார்.
“இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன், தற்போதைய இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையை சமாளிக்க மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடல் சார்ந்த அனர்த்த பதிலளிப்பு தொடர்பான பயிற்சி உட்பட உள்நாட்டு அவசரநிலை பதிலளிப்பு ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ளும் நிமித்தம் அமெரிக்காவும் இலங்கையும் பல வருடங்களாக பணியாற்றியுள்ளன. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை முகாமைத்தும் செய்ய மற்றும் குறைக்க உதவும், மற்றும் அனர்த்தங்களுக்கு தயார்படுத்திக் கொள்ளவும் அவற்றிலிருந்து சிறப்பாக மீட்சி பெறவும் சமூகங்களுக்கு உதவும் நிதியளிப்புகளை USAID, அமெரிக்க வனவள சேவை, மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் என்பனவும் வழங்குகின்றன எனவும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.