ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடம் கொடுத்திருக்க மாட்டார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் "எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான ஆணைக்குழு மக்கள் நலனைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கொரோனாத் தொற்று காரணமாக மக்கள் ஒன்றரை வருட காலமாக தொழில்வாய்ப்புகளை இழந்து, கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு தீர்மானித்தது.
ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பு, ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும்.
விலை அதிகரிப்பானது, சட்டியில் இருந்த மக்களை அடுப்புக்குள் விழச் செய்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் ஊடக அறிக்கையின் பின்னணியில் பஸில் ராஜபக்ஸ இயங்கவில்லை. பஸில் ராஜபக்சவுக்கு அவசியமானதை, அவர் நேரடியாகக் கூறுவார்" என குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை