மியான்மரின் வன்முறை வழியிலான இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என சர்வதேச நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
மியான்மரில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கலைத்து கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து இராணுவ ஆட்சியைக் கண்டித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் அமைதியான முறையில் இராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஐ..நா. கோரிக்கை விடுத்தது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் மட்டும் எதிராக வாக்களித்தது.
மியான்மருக்கு ஆயுதங்களை வழங்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தத் தீா்மானத்தின் மீது பேசிய மியான்மருக்கான ஐ.நா.வின் விசேட தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் புர்கெனர், மியான்மரின் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையால் பெரிய அளவிலான உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது என எச்சரித்தார்.
இவ்வாறான நிலையிலேயே மியான்மருக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என சர்வதேச நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.