இலங்கை விமானப் படையில் உள்ள இஸ்ரேலிய தயாரிப்பான 10 கிபிர் விமானங்களை மேம்படுத்த இஸ்ரேலுடன் 50 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
விமானத்தின் ராடர், நுண்ணறி கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி புதுப்பிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விமானத்தில் புதுப்பிக்கப்படும் தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை இலங்கை விமானப்படையினருக்கு வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
போர் விமானமான கிபிர் யுத்தத்தில் தாக்குதல்களை நடத்த இலங்கையால் பயன்படுத்தப்பட்டது. பெருந்தொகை வெடிமருந்துகளை ஏற்றிச் சென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் தொழில்நுட்பங்களுடன் கிபிர் வடிவமைக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை 1995 முதல் 2005 வரையான காலப்பகுதியில் கிபிர் C.2, C.7, C.2s ஆகியன உட்பட மொத்தம் 16 கிபிா் குண்டுவீச்சு விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்கியது.
இவற்றில் இரண்டு சி.7 ரக கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் கடந்த 2001 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதலின்போது முற்றாக அழிக்கப்பட்டன.
விபத்துக்களின்போது மேலும் 3 கிபிர் போர் விமானங்களை விமானப்படை இழந்தது. 2011 மார்ச் மாதம் பயிற்சியின்போது இரண்டு கிபிர் விமானங்கள் நடுவானில் மோதி அழிந்தன.
தற்போது இலங்கை விமானப் படையினர் வசம் இரண்டு TC.2s, இரண்டு C.7s, மற்றும் ஆறு C.2s என மொத்தம் 10 கிபிர் போர் விமானங்கள் உள்ளன.
இந்த விமானங்களை மேற்படுத்தி அது குறித்த மேலதிக தொழில்நுட்ப அறிவை இலங்கை விமானப் படையினருக்கு வழங்கும் வகையிலேயே 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேலுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை