பிரபல பொலிவூட் நடிகை தீபிகா படுகோனே புராண கதைகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
மகாபாரதம் புராண கதையை திரைப்படமாக்கும் பேச்சு 2 வருடங்களுக்கு முன்னர் கிளம்பியிருந்த போதிலும் அதன் பின்னர் எதுவித தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையில், இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில், “மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்.
புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும் அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.
ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர். சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது.
இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.