இலங்கையின் பிரபல மிருதங்க வித்துவான் சங்கீதரத்தினம் க.ப.சின்னராசா உடல் நலப் பாதிப்பால் இன்று காலமானார்.
1971ஆம் ஆண்டில் வட இலங்கை சங்கீத சபையின் 'மிருதங்க கலாவித்தகர்' பட்டத்தையும், 1974ஆம் ஆண்டில் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் 'சங்கீத ரத்தினம்' என்னும் பட்டத்தைப் பெற்ற அவர், நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரங்கேற்றம் கண்ட பெருமையினையும் தன்னகத்தே கொண்டுள்ளார். பலநூற்றுக்கணக்கான கலாவித்தகர்களையும் உருவாக்கியுள்ளார்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் வருகைதரு விரிவுரையாளராகவம் வட இலங்கைச் சங்கீத சபையின் பரீட்சகராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.
இவரது மாணவர்கள் யாழ்.பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைத்துறை, மட்டக்களப்பு விபுலாந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றின் மிருதங்கத்துறை விரிவுரையாளர்களாகவும் உலகளாவிய ரீதியில் ஆற்றுகையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.
ஈழத்தில் மிருதங்கக் கலை வேரூன்றக் காரணமாக விளங்கிய சங்கீதபூசணம் ஏ.எஸ்.இராமநாதன் அவர்களின் முதன்மை மாணவர்களுள் ஒருவரான இவர் தனது குருவைப்போன்று மிக நீண்ட மாணவ பரம்பரையைஉருவாக்கியவர் ஆவார். அத்துடன் சிறந்த பாடலாசிரியராகவும் பணியாற்றிய இவரால் வெளியிடப்பட்ட இவரது 55 பல்லவிகள் அடங்கிய 'பல்லவி அமுதம்' என்னும் நூல் ஈழத்தின் இசைவரலாற்றில் பெரும் சாதனையாகக் கொள்ளத் தக்கதாகும்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்