கொவிட் 19 தொற்று நோயை மிக விவைாக கண்டறியும் 500,000 அதிவிரைவு பரிசோதனை கருவிகளை (Rapid Diagnostic Tests - RDTS) அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட்-19 இற்கு எதிரான 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் (1.5 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான இப்பரிசோதனைகள், அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்திக் கிளையான, அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பினூடாக (USAID) இலங்கை சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை 16 வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க மக்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக இப்பரிசோதனைகள் வழங்கப்பட்டுள்ளன.
"வைரஸ் இனை மிகவிரைவாகக் கண்டறிவதை சாத்தியமாக்குவதன் மூலம், அமெரிக்க மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட இப்பரிசோதனைகள் இலங்கையில் உயிர்களைக் காப்பதுடன் பொதுச் சுகாதாரத்தினையும் பாதுகாக்க உதவும்" என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான USAID செயற்பணி இயக்குநர் ரீட் ஈஷ்லிமேன் கூறினார்.
"இந்த நன்கொடை இலங்கை அரசாங்கத்தின் பெருந்தொற்றுக்கான பதிலளிப்பிற்கு அமெரிக்கா வழங்கிய முந்திய உதவிகளின் அடிப்படையில் அமைவதுடன் எமது உறுதியான, நீண்டகால பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது." என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிறபொருளெதிரியாக்கி-கண்டறியும் (antigen-detecting) இந்த மிகவிரைவான நோய்கண்டறியும் பரிசோதனைகள் கொவிட்-19 வைரஸின் இருப்பை நேரடியாகக் கண்டறியும். இப்பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு எளிதானவையாக இருப்பதுடன் நேரடிப் பரிசோதனைகளுக்கான விரைவான, பரவலாக்கப்பட்ட அணுகலை சாத்தியமாக்குகின்றன. மேலதிக உபகரணங்களோ அல்லது விசேட ஆய்வுகூடங்களுக்கான தேவையோ இப்பரிசோதனைகளுக்கு இல்லாதிருத்தலானது, அதிகளவான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது.
8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான அவசர விநியோகங்கள் மற்றும் முக்கிமான சேவைகளையும் மேலதிகமாக அதே மாதிரியான நன்கொடையாக 200 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளையும் நன்கொடையாக வழங்கி பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இப்பெருந்தொற்றின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா இலங்கையுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றியுள்ளது.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், இப்பெருந்தொற்றின் எதிர்மறையான பொருளாதாரத் தாக்கங்களைத் தணிப்பதற்காகவும், மற்றும் முடிவாக உயிர்களைக் காப்பதற்காகவும் இந்த உதவிகளானது இலங்கையின் 25 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது,
USAID இன் கொவிட்-19 உதவியானது பல தசாப்தகாலமாக மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார முதலீடுகளின் அடிப்படையில் அமைவதுடன், இது அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் ஒரு கூறாகும். 1961ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 350 பில்லியன் இலங்கை ரூபாய்களுக்கும் (2 பில்லியன் டொலர்) அதிகமான பெறுமதியுடைய நிகழ்ச்சிகள் மூலமாக, USAID ஆனது ஆரோக்கியமான, கல்வியறிவுள்ள மற்றும் தொழில்புரியும் மக்கள்கூட்டத்தினை ஊக்குவிக்கிறது எனவும் இது குறித்து அமெரிக்க தூதரகம் இன்று விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.