முல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அம்பலப் பெருமாள் குளத்தின் அபிவிருத்தி பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அம்பலப் பெருமாள் குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான் பகுதி என்பன கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
அதாவது ஒரே நாளில் 345 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியதுடன் குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து குளத்தின் அணைக்கட்டில் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில் சிறு போக செய்கை நிறைவடைந்தவுடன் குறித்த புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதாவது அணைக்கட்டின் சேதமடைந்து காணப்பட்ட 300 மீட்டர் நீளமான பகுதி புனரமைக்கப்படவுள்ளன. அதேவேளை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்ற வான் பகுதிகளில் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேற்படி வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வேலைகள் எதிர் வரும் கால போக செய்கைக்கு முன்னர் செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு