ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிஷாத் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்தபோது, எரிகாயங்களுக்குள்ளாகி சாவடைந்த தலவாக்கலை – டயகமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி என்ற சிறுமியின் சாவு தொடர்பில், ரிஷாத் பதியுதீன் எம்.பியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன் திரும்ப எடுக்கப்பட்டபோது, பொலிஸார் இந்த விடயத்தை 'பி' அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் இதுவரை 36 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டுக்கு வந்து செல்பவர்களும் அதில் உள்ளடங்குகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.