ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதால் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறிவிடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது என ஜானாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியேற்றும் நோக்கில் வேகமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், அந்த இலக்கை அடைவது புதிய தலிபான் ஆட்சியாளர்களின் ஒப்துழைப்பைப் பொறுத்தது எனவும் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 31 -ஆம் திகதிக்கு பின்னரும் தேவைப்பட்டால் வெளியேறும் காலக்கெடு நீடிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31 -ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வெளிநாட்டுப் படைகளும் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் உள்ள திறமையான துறைசார் வல்லுநர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதை அமெரிக்க நிறுத்த வேண்டும் எனவும் தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்கா வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தே அமையும் என ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதால் எங்கள் படையினர் அங்கு அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வாளவு விரைவாக வெளியேறிவிடுவதே சிறந்தது எனவும் அவா் கூறினார்.
எனினும் தேவைப்பட்டால் ஆகஸ்ட் 31 ஆம் திகதியைத் தாண்டியும் ஆப்கானிலிருந்து வெளியேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும் திட்டங்களை உருவாக்குமாறு வெளிவிவகாரத்துறை மற்றும் பென்டகனுக்கு பணித்துள்ளதாக பைடன் குறிப்பிட்டார்.
ஆனால் ஆப்கானில் இருந்து ஆட்களை வெளியேற்றுவதில் இழுத்தடிப்புக்கள் நிலவுவதாக பைடன் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, காலக்கெடுவுக்குப் பின்னர் தலிபான்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை முன்னெடுக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எப்போது தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. எனவே முடிந்தவரை விரைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடுவதே சிறந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, ஆப்கானியர்கள் எவரும் கடந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டாலும் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். எனவே, அச்சம் காரணமாக யாரும் நாட்டில் இருந்து வெளியேற வேண்டாம். அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தலைநகரில் நடந்த செய்தி மாநாட்டில் வலியுறுத்தியுமையும் குறிப்பிடத்தக்கது.