அமெரிக்காவின் - நியூயோர்க் நகரில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு அவசரநிலை அமுல்படுத்தப்படுவதாக நகர மேயர் பில் டி பிளாசியோ இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால் அவசரநிலை அமுல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்தார்.
கடும் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 5,300 வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
மழை ஓய்ந்ததும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். தற்போதைய நிலையில் சுரங்கப்பாதைகள் மற்றும் வீதியோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் நியூயோர்க் மேயர் பில் டி பிளாசியோ கோரியுள்ளார்.
இதேவேளை, கடும் மழை, வெள்ளத்தை அடுத்து நியூஜெர்சியும் அவசரநிலையை அறிவித்ததுள்ளது. அங்கு வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.