முழுமையாகத் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கனடா நீக்குகிறது. தளர்த்தப்பட்ட பயணக் கட்டுபாட்டு நடைமுறை இன்று செப்டம்பர் -07, 12:01 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டவர்கள் சுற்றுலா உள்ளிட்ட அத்தியாசியமற்ற பயணங்களுக்காகவும் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், கனடாவுக்கு வரும் பயணிகளுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையும் நீக்கப்படுகிறது.
கனடா பைசர்-பயோடெக், மொடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளது. இந்தத் தடுபூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களே கட்டுப்பாட்டுத் தளா்வின் கீழ் கனடா பயணம் செய்ய தகுதி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொவிட் 19 தொற்று நோய் கட்டுபாடுகள் மற்றும் மேலதிக பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பயணங்களில் போது விமான நிலையங்களில் கூடுதல் தாமதங்கள் ஏற்படலாம் என ரொரண்டோ - பியர்சன் விமான நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கத்தை விட பயணங்களின்போது பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என்பதால் அதற்கான தயார்படுத்தல்களுடன் வருமாறு மொன்ட்ரியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
கொவிட் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக அமெரிக்காவுடனான எல்லையை கடந்த ஜூலை மாதம் கனடா மீளத் திறந்தது. அத்துடன், கனடா வரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கான கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறையும் நீக்கப்பட்டது.
எனினும் கனேடியர்களுக்கு தனது எல்லைகளை அமெரிக்கா இதுவரைத் திறக்கவில்லை. அத்துடன் கனடாவுக்காக பயண ஆலோசனையையும் 3-ஆம் எச்சரிக்கை நிலைக்கு நிலைக்கு அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இதேவேளை, கனடாவுக்கு பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அன்டிஜென் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில வெளிநாட்டவர்கள் வருகைக்குப் பின்னரும் எழுமாற்றான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ