சிலியில் 6 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கு சீனாவின் தயாரிப்பான சினோவாக் கொவிட் 19 தடுப்பூசி போட சிலியின் பொது சுகாதார நிறுவனம் (ISP) ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார நிபுணர்களுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் சிறுவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்படுவதாக சிலியின் பொது சுகாதார நிறுவன பணிப்பாளர் ஹெரிபெர்டோ கார்சியா அறிவித்தார்.
கொவிட் 19 தொற்று நோயில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கார்சியா கூறினார்.
தடுப்பூசி போடப்படாததால் தொற்று நோயால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிலியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி போட இந்த ஆண்டு ஜனவரி -20 ஆம் திகதி சிலி பொது சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
சமீபத்திய தரவுகளின்படி சிலியில் மொத்தம் 13,074,496 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15.2 மில்லியன் மக்கள் தொகையில் தடுப்பூசி பெறத் தகுதியான 86.01 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.