ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் ($ 31) மதிப்பிலான அவசர உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை நிறுவியுள்ள தலிபான்களுடன் நல்லுறவுகளைப் பேண தயாராக இருப்பதாக பீஜிங் தெரிவித்துள்ள நிலையில் இந்த உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலிபானின் இடைக்கால அமைச்சரவை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய ராஜ்ஜியமாக தலிபான்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தலிபான் அரசை அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே தலிபான்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்க முடியும்என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவசர-அவசரமாக தலிபான்களுடனான உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் நேற்று புதன்கிழமை நடந்த இணைய வழி கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆப்கானிஸ்தானுக்கான உதவிகளை அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்த நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் கொவிட் 19 தடுப்பூசி மருந்துகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த இறுதி நிமிடம் வரை அமெரிக்கா அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதாக சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விரும்பத்தகாத இராணுவ தலையீடுகளை மேற்கொண்டிருந்தது. தனது சித்தாந்தங்களை ஆப்கானியர்கள் மீது அமெரிக்கா திணித்து வந்தது என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.
இதேவேளை, தலிபான் அதிகாரிகள் சீனாவை ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான பங்காளியாக விவரித்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சீன முதலீடுகள் உதவும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்பே கடந்த ஜூலையில் தலிபான் தலைவர்களுடனான பேச்சுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.