ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து நாட்டில் இருந்து தப்பியோடியமைக்காக என் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
60 இலட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் ஆப்கானை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தஞ்சமடையும் முடிவை எடுத்தேன். இது என் வாழ்நாளில் நான் எடுத்த மிகக் கடினமான முடிவு எனவும் அவா் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனது பாதுகாப்பு அதிகாரிகளே என்னை நாட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தினர். 1990 களில் நடந்த உள்நாட்டுப் போரின்போது அனுபவித்தது போன்று நரகமாக தெருச் சண்டைகளில் ஈடுபட நான் விரும்பவில்லை. காபூலையும் அங்குள்ள ஆறு மில்லியன் குடிமக்களையும் காப்பாற்றவே நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.
ஆப்கானிஸ்தானை ஜனநாயக நாடாக, வளமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக மாற்றுவதற்கு 20 ஆண்டுகள் என்னை அர்ப்பணித்துப் பணியாற்றினேன் எனவும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து 163 மில்லியன் டொலர்களை எடுத்துச் சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. நான் எந்தவித பணத்தையும் எடுத்துச் செல்லவில்லை. நானும் எனது மனைவியும் எங்களின் சொந்த பணத்தையே பயன்படுத்தி வருகிறோம். எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதை நிரூபிக்க ஐ.நா. தலைமையிலான நிதி புலனாய்வுக் குழு அல்லது எந்தவித குழுவின் ஆய்வுக்கும் அனுமதிக்கத் தயார் எனவும் அவா் கூறியுள்ளார்.