மெக்சிகோவின் மத்திய ஹிடால்கோ மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் குறைந்தது 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நதி ஒன்று உடைப்பெடுத்து பெருக்கெடுத்ததால் துலா நகரில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை வெள்ளம் சூழ்ந்தது. அத்துடன், அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இறந்தவர்களில் சிலர் கொரோனா தொற்று நோயாளிகளாவர். அவர்கள் தொற்று நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு ஒக்ஸிஜனுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்கள். இவ்வாறான சிலர் ஒக்ஸிஜன் தடைப்பட்டு உயிரிழந்தனர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினருடன், இராணுவத்தினரும் உடனடியாகக் களமிறக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 40 நோயாளிகளை மீட்டு பத்திரமாக வெளியேற்றினர்.
இந்த மருத்துவமனை மரணங்கள் குறித்து மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, ஹிடால்கோ மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோ நகரத்தின் வடக்கு புறநகரான எகடெபெக்கில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.