ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளாக அந்நநாட்டில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் 10 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெண்களின் கல்வி அறிவு விகிதம் 2 மடங்காக உயர்ந்தது என யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டில் ஆரம்ப பள்ளிகளில் ஒரு பெண் குழந்தைகூட சேர்க்கப்படாத நிலையில் 2018-இல் தொடக்கப் பள்ளிகளில் 25 இலட்சம் பெண் குழந்தைகள் படித்தனர். அதன் மூலம் ஆரம்பப் பள்ளி மாணவர்களில் 40 சதவீதம் பெண் குழந்தைகள் என்ற நிலை அங்கு உருவாகியுள்ளது.
இந்தச் சூழலில், நாட்டை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர். வகுப்புகளில் மாணவர்கள், மாணவியரை தனித் தனியாக பிரித்து இரு தரப்பினருக்கும் இடையே திரையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும், பெண்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இருபாலர் கல்வி, பெண்களுக்கு ஆண் ஆசிரியர்கள் கற்பிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதால், உயர் கல்வியில் பெண்கள் சேர்வது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் யுனெஸ்கோ கவலை வெளியிட்டுள்ளது.
கல்வி பெறும் வாய்ப்பை பாதுகாப்பதுதான் ஆப்கானிஸ்தானின் மிக முக்கியத் தேவை என யுனெஸ்கோ தலைவர் ஆட்ரிர அஸ்லே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெண்கள் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு வேலைக்குச் செல்லவும் கல்வியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என தலிபான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.