நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணைகளை வட கொரிய ஏவி பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்டது என வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் 1,500 கிலோ மீற்றர் தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடியவை எனவும் வட கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஏவுகணை பரிசோதனை மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறவில்லை என வட கொரிய குறிப்பிட்டுள்ளது.
வட கொரியா கடுமையாக பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையிலும் ஆபத்தான ஆயுதங்களை உருவாக்கும் திறனை தொடர்ந்து மேற்படுத்தி வருவதை இந்தச் சோதனை நிரூபித்துள்ளது.
வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் தந்திரோபய முன்னேற்பாடாகவே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது.
இது கொரியாவின் அதி தூரம் சென்று தாக்கும் வலுக்கொண்ட ஏவுகணையாகும். இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என வட கொரியா தொடர்பான பாதுகாப்பு ஆய்வாளர் அங்கித் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் கவலை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து ஆராயப்படும் என
ஜப்பானின் அமைச்சரவை தலைமை செயலாளர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது குறித்து அமெரிக்காவும் கரிசனை தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ந்தும் இராணுவத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. வட கொரியாவின் நீண்ட தூர ஏவுகணைகளால் அதன் அயல் நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பில் தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் வடகொரியாவின் அணு ஆயுதமயமாக்கல் செயல்முறை குறித்து விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உயர் மட்ட அதிகாரிகள் இந்த வாரம் சந்திக்க உள்ளனர்.