அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்று இன்று தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது. இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த , அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து வெளியிடும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.