அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மது போதையில் சென்ற சிறைச்சாலை ராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த கைதிகளை முழந்தாளிடச் செய்து, தலையில் துப்பாக்கி வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஒரு அமைச்சிலிருந்து மட்டும் லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் துன்புறுத்தல் விவகாரத்துக்கு உள்நாடு மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்து கடும் கண்டனங்களை எழுந்ததை அடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியும் அவருடைய இராஜினாமாவை ஏற்றுள்ளார்.
எனினும் இரத்திரன கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக அவர் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஒரு அமைச்சுப் பொறுப்பில் இருந்து மட்டும் லொஹான் ரத்வத்த இராஜினாமா செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.