ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் புதிய ஹைப்பர்சொனிக் ஏவுகணையை (hypersonic missil) வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
வடகொரியா அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்தது.இதனை அறிந்துள்ளதாக அமெரிக்காவும் கூறியது.
கிழக்கு கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடற்பரப்பில் இந்த ஏவுகணை வீழ்ந்தது.
இந்த மாத ஆரம்பத்தில் 1,500 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய இரண்டு நீண்ட தூர ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்த நிலையில் செவ்வாய்க்கிழமை மற்றொரு சோதனை இடம்பெற்றுள்ளது.
வட கொரியா ஏவுகணை பரிசோதனையை நடத்தியபோதும் அது எந்த வகை ஏவுகணை என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையிலேயே செவ்வாய்க்கிழமை ஹைப்பர்சொனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
க்வாசாங் -8 (Hwasong-8) என்ற இந்த ஹைப்பர்சொனிக் ஏவுகணை வட கொரியாவின் ஐந்து ஆண்டு இராணுவ மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான சோதனையாக அமைந்துள்ளது.
வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் பியோங்யாங்கின் வளர்ந்து வரும் ஆயுத தொழில்நுட்பத்தின் மற்றொரு முக்கிய அறிகுறியாகவும் இது அமைந்துள்ளது.
வட கொரியாவின் தற்பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த ஹைப்பர்சொனிக் ஏவுகணை சோதனை இடம்பெற்றதாக அந்நாட்டு அரச ஊடகமாக கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பலவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.