ஆஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் இந்த முடக்க உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள் கொள்வனவு, கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அவா்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால் ஆஸ்திரியாவில் கொவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுமார் 20 இலட்சம் பேர் வீடுகளுக்குள் முடங்க நேரிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எடுப்பது கடினமாகவே இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது அவசியம் என ஆஸ்திரிய சான்சலர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கூறினார்.
ஆஸ்திரியாவின் மக்கள்தொகையில் சுமார் 65% பேருக்கு இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த தடுப்பூசி வீதமாக இது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இங்கு மீண்டும் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாட்களில் 100,000 பேருக்கு 800 பேர் என்ற அடிப்படையில் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த தொற்று நோய் பரிமாற்ற வீதமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டே தடுப்பூசி போடாதவர்களை வீடுகளில் முடக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வருகின்றன. நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் இரண்டு வாரங்களுக்குள் மருத்துவமனைகள் அவற்றின் பராமரிப்புத் திறனை இழக்க நேரிடும் என வியன்னா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவா ஷெர்ன்ஹம்மர் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரியா உள்ளடங்கலாக ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுமார் 20 இலட்சம் புதிய கொவிட் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நோய் தொடங்கியதிலிருந்து ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மிக அதிகளவு தொற்று நோயாளர் தொகை இதுவாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 27,000 கொரோனா மரணங்கள் பதிவாகின. உலகில் கடந்த வாரம் பதிவான மொத்த கொரோனா மரணங்களில் 50 வீதத்துக்கும் அதிகமானவை ஐரோப்பாவில் பதிவானதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு ஐரோப்பாவில் குறைந்த தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளில் மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவில் உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் 100,000 மக்கள்தொகைக்கு 208.9 என்ற அடிப்படையில் கடந்த வாரம் புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
இந்நிலையில் மீண்டும் நோற்று நோயின் மையப் பகுதியாக ஐரோப்பா மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் ஹான்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பெப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் மேலும் 5 இலட்சம் இறப்புகள் பதிவாகலாம் எனவும் அவா் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.