கொவிட்-19தடுப்பூசி மூலம் வியாபாரத்தின் மூலம் பைசர், பயோஎன்டெக், மொடர்னா ஆகிய மருந்து நிறுவனங்கள் கூட்டாக ஒவ்வொரு செக்கனுக்கும் 1,350 டொலர் இலாபம் ஈட்டுவதாக மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பு (People’s Vaccine Alliance) தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் சொந்த வருவாய் கணக்கை கொண்டு மேற்கொண்ட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உலகெங்கும் தடுப்பூசி பகிர்வு குறித்து ஆராயும் மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பு கூறியுள்ளது.
கொவிட் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் பெரும்பாலானவற்றை பணக்கார நாடுகளுக்கு விற்று இலாபம் பார்த்துள்ளன. ஆனால் பெரும்பாலான ஏழை நாடுகளுக்கு போதிய தடுப்பூசி விநியோகிக்கப்படவில்லை.
இந்த மூன்று நிறுவனங்களுக்கும் கூட்டாக இந்த ஆண்டு வரிக்கு முந்திய இலாபமாக $34 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டக்கூடும் எனவும் மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழை நாடுகளில் வெறும் 2 வீதமானவர்கள் மட்டுமே இதுவரை கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சற்றும் சமூகப் பொறுப்பின்றி சில நிறுவனங்கள் நாளொன்றுக்கு பல ஆயிரம் கோடிகள் இலாபம் பார்ப்பது வெட்கக்கேடானது என மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பின் ஆப்பிரிக்க தலைவர் மாசா செயும் (Maaza Seyoum) தெரிவித்துள்ளார்.
பைசர், பயோஎன்டெக், மொடர்னா ஆகிய மருந்து நிறுவனங்கள் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. எனினும் அஸ்ட்ராஜெனேகா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனங்கள் இலாபநோக்கமற்ற வகையில் தடுப்பபூசிகளை விநியோகம் செய்துள்ளன எனவும் மாசா செயும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தடுப்பூசி குறித்த ஆய்வுக்காக பொது நிதியில் 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை பைசர், பயோஎன்டெக், மொடர்னா நிறுவனங்கள் பெற்ற போதும்
உலக சுகாதார அமைப்பு வழியாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு தடுப்பூசி தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கான அழைப்புகளை இந்நிறுவனங்கள் நிராகரித்துவிட்டன.
இந்த நிறுவனங்கள் சர்வதேச அளவில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதுடன், விலைகளையும் குறைத்தால் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் எனவும் மக்கள் தடுப்பூசி கூட்டமைப்பின் ஆப்பிரிக்க தலைவர் மாசா செயும் தெரிவித்துள்ளார்.
உலக அமைப்பின் வர்த்தக ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்ட தள்ளுபடியை ஏற்று கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளை உடனடியாக கைவிடுமாறு மருந்து நிறுவனங்களுக்கு ஆப்ரிக்கன் அலையன்ஸ் (African Alliance) குளோபல் ஜஸ்டிஸ் நவ் (Global Justice Now) ஒக்ஸ்பாம் ( Oxfam) மற்றும் யு.என்.ஏய்ட்ஸ் (UNAids ) உள்ளிட்ட 80 உறுப்பினர்களைக் கொண்ட PVA கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது..
அமெரிக்கா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றபோதும் பிரிட்டன் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட செல்வந்த நாடுகளால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.