ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கில்பர்ட் டிராகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
தடுப்புக் காவலில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
52வயதான கில்பர்ட் டிராகன் ஒரு முன்னாள் பொலிஸ் ஆணையாளராவார். அவரை மருத்துவமனையில் உரிய நேரத்தில் அனுமதிக்க தவறியதாலேயே காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நான் இரண்டு வாரங்களாக அவரை வெளியேற்றி மருத்துவ சிகிச்சை அளிக்க போராடினேன் எனவும் சந்தேக நபர் கில்பர்ட் டிராகன் மனைவி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் லிஸ்ட் குயிட்டல் (Liszt Quitel) பதிலளிக்கவில்லை.
ஜூலை 7 அன்று ஜனாதிபதி மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட இரவில் டிராகன் ஏனைய கொலைச் சந்தேக நபர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், கொலைக்கான திட்டமிடல் கூட்டங்களில் பங்கேற்றதாகவும் ஹெய்ட்டி தேசிய பொலிஸார் கடந்த ஒகஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் தனது கணவர் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கொலை நடந்த அன்று இரவு அவர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் சந்தேக நபர் கில்பர்ட் டிராகன் மனைவி நோயல் கூறினார்.
பொலிஸார் அவரைத் தேடிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு டிராகன் தானே நேரில் சென்று புலனாய்வாளர்களுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹெய்ட்டி ஜனாதிபதி மொய்ஸ் படுகொலை சந்தேகத்தில் முன்னாள் கொலம்பிய இராணுவ அதிகாரிகள் குழு உட்பட 40 பேர் வரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.