அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவின் காடுகளில் இருந்து மில்லியன்கணக்கான செந்நண்டுகள் பெருங்கடலை நோக்கிய தங்களது வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளன.
வழக்கமாக ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்யும் முதல் மழையின்போது மில்லியன் கணக்கில் செந்நண்டுகள் இவ்வாறு இடம்பெயர்வது வழமையாகும்.
கிட்டத்தட்ட 50 மில்லியன் செந்நண்டுகள் இவ்வாறு இடம்பெயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு வீதிகள் மூடப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் நண்டுகள் இடையூறு இன்றி கடலை நோக்கி நகர்வதற்காக விசேட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்டுள்ள வீதிகளில் நண்டுகள் சிக்கி உயிரிழக்காமல் பாதுகாக்கும் வகையில் மேலதிக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி, விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இனப் பெருக்கத்துக்குத் தயாராகும் காடுகளில் இருந்து இக்காலப்பகுதியில் நண்டுகள் கடலை நோக்கி இடம்பெயர்வதாக விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நண்டுகளில் இடம்பெயர்வைக் காண கிறிஸ்மஸ் தீவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடியுள்ளனர்.
இந்த நண்டுகள் பிறருக்குக் காயத்தை விளைவிக்கக்கூடியவாறு கடிக்கக்கூடியவை அல்ல. எனினும் இவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளுமாறு சுற்றுப்பயணிகளிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.