லிபியா அருகே மத்தியதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 75 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
இத்தாலிக்கு அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்த அந்த அகதிகளில் 15 பேரை மட்டும் மீனவா்கள் மீட்டு லிபியா அழைத்துச் சென்றனா். கடந்த வாரம் இந்த விபத்து இடம்பெற்றதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
லிபியாவைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சட்டவிரோாதமாக மத்தியதரைக் கடல் வழியாக புலம்பெயரும் முயற்சிகளின்போது இந்த ஆண்டு இதுவரை 1,300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தாலி போன்ற நாடுகளை அடைய விரும்புவோர் லிபியா - மக்ரெப்பில் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து படகுகளில் புறப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியின் சிசிலி மற்றும் லம்பேடுசா கடற்கரையில் இரண்டு படகுகளில் வந்த சுமார் 400 புலம்பெயர்ந்தோரை மீட்டதாக இத்தாலிய கடலோர காவல்படை சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.
ஆண்டின் முதல் 10 மாதங்களில் 53,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இது 2020 இல் வந்த அகதிகள் தொகையை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாகும் எனவும் இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.