Thursday 25th of April 2024 11:49:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
உலகை அச்சுறுத்தும் புதிய திரிபு; டெல்டாவை விட வீரியம் மிக்க வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!

உலகை அச்சுறுத்தும் புதிய திரிபு; டெல்டாவை விட வீரியம் மிக்க வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!


'டெல்டா' வைரஸ் திரிபை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து உலகளாவிய கொவிட் அச்சுறுத்தல் நிலை மீளவும் அதிகரித்துள்ளது.

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் இந்தியாவிலும் விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

நாட்டில் கொரோனா 4 ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம். ஆனால் இந்த புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது.

கெளடெங் போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென் ஆப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம். தென் ஆப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு கவுன்சிலும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘வெள்ளிக்கிழமை (நவ. 26) உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம். தென் ஆப்பிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுவிட்டதால், இதன் தோற்றம் தென் ஆப்பிரிக்காதான் என தீா்மானித்துவிட முடியாது. கொரோனா வைரஸின் மரபணுவில் 30 க்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது’’ என்றாா்.

ஏற்கெனவே கடந்த வாரம் லண்டனின் இம்பீரியல் கல்லூரியை சோ்ந்த தீநுண்மியியல் நிபுணா் டாம் பீகாக் என்பவா், உருமாறிய புதிய வகை வைரஸ் குறித்து விளக்கமாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தாா். பிரிட்டனில் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை என்றாலும், இதன் மீது விஞ்ஞானிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டதை மேற்கோள்காட்டி, பிரிட்டனுக்கு அவா் வியாழக்கிழமை ட்விட்டரில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தாா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் வரை சராசரியாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிவந்த நிலையில், புதன்கிழமை 1,200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா்.

ஆப்பிரிக்க கண்டத்திலேயே அதிகபட்சமாக இங்கு 9 ஆயிரம் போ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வனா ஆகிய நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளின் வழியாக வரும் பயணிகளை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களின் தலைமைச் செயலாளா்களுக்கும், யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளா்களுக்கும் இந்திய மத்திய சுகாதார அமைச்சக செயலாளா் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில், கொரோனா உறுதியான பயணிகளின் மாதிரிகளை தொடா்புடைய மரபணு கண்காணிப்பு ஆய்வகங்களுக்கு அனுப்புவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE