பல வருடங்களாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பொலிஸ் பயிற்சியை நிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து காவல்துறையினரால் இலங்கைக்கு வழங்கப்படும் பயிற்சி தொடர்பில் புதுப்பிக்க வேண்டிய உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் காலாவதியாகியிருந்த நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிக்கும் எண்ணமில்லை என்றும் ஸ்கொட்லாந்து பொலிஸ் திணைக்கள பிரதானி இயன் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் புதுப்பிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்துமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரதானி மேலும் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதாக ஸ்கொட்லாந்து வெளிவிவகார அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினரினால் பல தான்தோன்றித்தனமான கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்துப்படும் நிலை அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிபிசி ஸ்கொட்லாந்து காவல்துறை திணைக்கள பிரதானியிடம் வினவியபோது, "உலகம் முழுவதும் காவல் துறையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் உண்மையிலேயே கடமைப்பட்டுள்ளோம், இதன் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்தவும் செயல்படுத்தவுமே நாம் முயற்சிக்கிறோம் என்றார்.