புதிதாக கண்டறியப்பட்டஓமிக்ரோன் கொவிட் உரு திரிபு வைரஸ் தொடர்பாக விழிப்புடன் இருப்பதுடன், அது நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
புதிய கவலைக்குரிய உரு திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆபத்தானதாகக் கருதப்படும் புதிய ஓமிக்ரோன் உரு திரிபு இலங்கைக்குள் நுழையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பதும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போடுவதும் தற்போதுள்ள சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, புதிய ஓமிக்ரோன் உரு திரிபு இலங்கைக்குள் நுழையக்கூடிய பல ஓட்டைகள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
விமான நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைமை பலவீனமானது. நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகளிடம் இருந்து எளிதில் தப்பிச் செல்ல முடியும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் சோதனைகளைத் தவிர்க்க அதிகாரிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமானது என உபுல் ரோஹன வலியுறுத்தினார்.