ஒமிக்ரோனால் கடுமையாக நோய்வாய்ப்படுதலில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் சுமார் 85 வீதம் வரை பாதுகாப்பை வழங்கக்கூடியவை எனக் கருதுவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் முன்னர் பரவிய கொவிட் திரிபுகளை விட ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசிகளின் பாதுகாப்பு -செயல்திறன் சற்று குறைவாக உள்ளது எனவும் வரையறுக்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்மாய்வின் முடிவில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விரைவாகப் பரவி வரும் ஒமிக்ரோன் புதிய திரிபு குறித்து முழுமையான அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் காரணமாக இந்த வைரஸ் மற்றும் அதற்கெதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து நிச்சயமற்ற நிலை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் அசல் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டவை. ஓமிக்ரோன் திரிபை எதிர்த்து போராட வடிவமைக்கப்படவில்லை. எனவே தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரோனுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை அளிக்கவில்லை.
எனினும் பூஸ்டர் ஒமிக்ரோனை எதிர்த்துப் போராடுவதில் கணிசமாக பங்களிப்பை ஆற்றுகிறது என்பதே எங்களின் மதிப்பீடு. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் ஒமிக்ரோனில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் மூலம் நோயெதிா்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் ஊடாக வைரஸ் அதிக அளவில் நகலெடுத்து பெருகுவதை தடுக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு செயல்திறன் 20 முதல் 40 வீதம் உள்ளது எனவும் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் பூஸ்டா் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி ஒமிக்ரோனுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என்பதே இம்பீரியல் கல்லூரி மதிப்பீடாக அமைந்துள்ளது.
டெல்டாவுக்கு எதிராக பூஸ்டர் 97% பாதுகாப்பை வெளிப்படுத்துகிறது. எனினும் ஒமிக்ரோனுக்கு எதிரான இதன் செயல்திறன் 80 முதல் 85.9% வரை இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி போடும் செயற்பாடுகளை துரிதப்படுத்தி வருகின்றன. இங்கிலாந்தில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் 861,306 பேர் பூஸ்டர் 3-ஆவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து