2021 ஆம் ஆண்டிற்கான சுனாமி பேரழிவின் நினைவு நாளிற்கான ஏற்பாட்டிற்கான இரண்டாவது கூட்டம் 23.12.2021 காலை 10.00 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இடம்பெற்றது.
தவிசாளர் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வருடத்தினைப் போலவும் 26ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு சுனாமி நினைவாலையத்தில் இஸ்லாமிய, இந்து சமய வழிபாடுகளைத் தொடர்ந்து கத்தோலிக்க மதத்தினருடைய திருப்பலி நடைபெறும் எனவும் அத்துடன் மாலை 5.05 க்கு தண்ணீரூற்று கயட்டை பிரதேசத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.
இந்த அஞ்சலிக்கான போக்குவரத்தினை தனியார் போக்குவரத்து சேவை இலவசமாக ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 3.30 க்கு பேரூந்து முள்ளிவாய்க்கால், வட்டுவாகல், செல்வபுரம் ஆகிய கிராம மக்களுக்கான தனியான சேவையையும், முல்லைத்தீவு பகுதியை அண்டிய பகுதி மக்களுக்காக தனியான பேரூந்து சேவையையும் மற்றும் கள்ளப்பாடு, தீர்த்தக்கரை கிராம மக்களுக்கு தனியான பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தவிசாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முல்லைப் பங்குத்தந்தை, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், வர்த்தக சங்க அமைப்பினர், போக்குவரத்து சபையினர், பொது அமைப்பினர் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு