கொரோனா வைரஸ் முந்தைய திரிபுகளுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனை பராமரிப்புத் தேவைப்படும் வாய்ப்பு 50% முதல் 70% குறைவாக இருப்பதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு ஊக்கமளிக்கிறது. எனினும் ஒமிக்ரோன் அசுர வேகத்தில் பரவுவதால் அதிக தொகையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை அச்சம் தருவதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களே தற்போது அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸால் அதிகளவில் வயதானவர்கள் பாதிப்பட்டால் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது எனவும் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு முடிவு கூறுகிறது.
இதேவேளை, இந்த ஆய்வு முடிவு நம்பிக்கையளிக்கிறது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என இங்கிலாந்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறினார்.
எனினும் அசாதாரண வேகத்தில் ஒமிக்ரோன் பரவி வருவதால் தினசரி தொற்று நோயாளர் தொகை ஒரு இலட்சத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் தொகையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் அதிக அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும் சஜித் ஜாவித் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் நிலைமை மோசமாகி வருவதால் எந்நேரமும் இறுக்கமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து