அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பண மோசடி வழக்கில் சிக்காமல் இருப்பதற்காக பசில் ராஜபக்ச இந்த நாட்டை காட்டிக் கொடுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உண்மையான பிரச்சினை நிதியமைச்சர் பசில் ராஜபக்சசவிடம் உள்ளது. அவர் தனது ஓய்வு காலத்தை அமெரிக்காவில் கழிக்க ஏற்ற வகையில் நாட்டை காட்டிக்கொடுத்து வருகிறார்.
அமெரிக்க பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டை ஆட்சி செய்கிறார். நாட்டின் பொருளாதாரம் இந்த அளவுக்கு மோசமடைய அனுமதித்துவிட்டு இப்போது எதுவும் செய்யாமல் அவர் அமர்ந்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு தகுதி இல்லை எனவும் விமல் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.
இன்று இரவு அரசாங்கத்தின் 11 அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சர் பதவியில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்தும் ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.