கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக காரியாலயம் முன்பாக உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டை நிறுத்துமாறு கோரி அவர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பதாகைகளை எந்திவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 4 மணி வரையான நிலவரப்படி, 4 ஆயிரத்து 120 உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்ய - யுக்ரேன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.
உக்ரேனில் மிக குறைந்த அளவான இலங்கையர்கள் உள்ளனர்.
அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சிலர் வெளியேறியுள்ளனர்.
அதேநேரம், பெலருஸ்ஸில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.