தாய்வானை சுதந்திர நாடாக அமெரிக்கா முறையாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அழைப்பு விடுத்துள்ளார்.
தாய்வான் - தைபேயில் இன்று வெள்ளிக்கிழமை நிகழ்வொன்றில் பேசும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கம் தாய்வானை சுதந்திர நாடாக அங்கீகரிக்க உடனடியாக எடுக்க வேண்டும். தாய்வான் அமெரிக்காவின் இராஜதந்திர அங்கீகாரத்தை பெற்ற ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக மாற வேண்டும் என தாய்வானின் சிந்தனைக் குழாம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வில் இன்று பேசிய மைக் பாம்பியோ வலியுறுத்தினார்.
1979 இல் சீனாவுடனான அதன் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா தாய்வானில் இருந்து அதன் இராணுவப் படைகள் அனைத்தையும் விலக்கிக் கொண்டு, தைபே உடனான இராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்டது.
இந்நிலையில் சீனா மக்கள் குடியரசை ஒரு இறையாண்மை கொண்ட அரசாங்கமாக அமெரிக்கா தொடர்ந்து மதிக்க வேண்டும் என்றாலும், சுதந்திரத்தை விரும்பும் 23 மில்லியன் தாய்வான் மக்கள் மற்றும் அதன் சட்டப்பூர்வ, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கான இராஜதந்திர அங்கீகாரத்தை அமெரிக்கா இனி புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ முடியாது என்று பாம்பியோ கூறினார்.
இந்நிலையில் தாய்வானை சுதந்திர நாடாக அமெரிக்கா முறையாக அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று வெளியிட்ட கருத்து அபத்தமானது, முட்டாள்தனமானது என சீனா உடனடியாக கண்டித்தது.
பாம்பியோ ஒரு முன்னாள் அரசியல்வாதி. அவரது நம்பகத்தன்மை நீண்ட காலமாக திவாலாகி விட்டது. அத்தகைய நபரின் முட்டாள்தனமான பேச்சு வெற்றி பெறாது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.