கடந்தமூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் இழந்து உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகவங்கி மூலம் தற்போது சுமார்100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
அந்தநாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு 16,000 கோடிஅமெரிக்க டொலர் (160பில்லியன்) செலவிடப்படும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத சரிவை வங்கி எதிர்பார்க்கிறது. இது ஏழ்மையான நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மால்பாஸ் கூறினார்.
எங்கள் மதிப்பீட்டின் பிரகாரம் சுமாா் 60 மில்லியன் மக்கள் வரை அதிக வறுமை நிலைக்குள் தள்ளப்படுவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களும் பின்தங்கி உலக பொருளாதார மந்த நிலை ஏற்படும் எனவும் அவா் குறிப்பிட்டாா்.
உலகில்கிட்டத்தட்ட ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால்பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 300,000 க்கும்அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதுவரை உலக வங்கி 5.5 பில்லியன் டொலர்களை ஏழை நாடுகளில் சுகாதார அபிவிருத்திக்காவும் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக சேவைகளுக்காகவும் செலவிட்டுள்ளது.
ஆனால்உலக வங்கியின் முயற்சிகள் மட்டும் போதுமானதாக இல்லை.மேலும் துரித மீட்சியை உறுதி செய்வதற்காக ஏழை நாடுகளுக்கு உதவியை முடுக்கிவிடுமாறு நன்கொடை நாடுகளை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வலியுறுத்தினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்