கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விமானப் போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையால் நாடு திரும்ப முடியாமல் பொலாரஸ் நாட்டில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நேற்று இரவு விசோட விமானத்தின் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
பெலாரஸ் மின்ஸ்க் நகர் விமான நிலையத்தில் இருந்து வந்த சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 1206 ரக விசேட விமானத்தில் குறித்த இலங்கை பயணிகள் நேற்று (மே-28) இரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு பொலாரஸில் இருந்து திரும்பியவர்களில் அநேகமானோர் அந்நாட்டில் உயர் கல்வியினை கற்பதற்காக சென்றிருந்த மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர், இலங்கை விமானப் படையினரால் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதாக என்பதை கண்டறியும் முதல்கட்ட உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த இலங்கையர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினரால் விசேட பேருந்துகள் மூலம் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக குறித்த மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை