"உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்பு கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்."
- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சனிக்கிழமை கண்டி தலதாமாளிகைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல் ஆணைக்குழு இருக்கின்றது. பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அந்த ஆணைக்குழு தயாராக வேண்டும். தேர்தலை நடத்த வேண்டும் என்பது ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்டவர்களின் கடமை மற்றும் பொறுப்பாகும். தேர்தல் என்பது கட்டாயம் நடத்தப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் அதனை செய்வார்கள் என நினைக்கின்றோம்.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிரணியே தேர்தலைக் கோரவேண்டும். நாம் எதிரணியில் இருக்கும்போது இதனையே செய்தோம். ஆனால், தற்போது எதிரணி தேர்தலுக்கு அஞ்சுகின்றது. அதனை ஒத்திவைக்க முயற்சிக்கின்றது. எனவே, களநிலைவரம் என்னவென்பது மக்களுக்கு தற்போதே புரிந்துவிட்டது.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஓரிருவரை கைது செய்ததுடன் அந்தப் பணி நிறைவுபெறவில்லை. பின்னணி ஆராயப்படுகின்றது. சந்தேகநபர்களைப் தேடிச்சென்று கைதுசெய்கின்றோம்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), மகிந்த ராசபக்ச, இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை