வடமராட்சி புலோலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (ஜூன்-2) காலை சடலமாக காணப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது,
வடமராட்சி புலோலி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை காவலாளியே இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார். குறித்த காவலாளி நேற்று இரவு பாடசாலையின் காவல் கடமையை பொறுப்பேற்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பகல் கடமையினை பொறுப்பேற்பதற்காக காலை 6.00 மணிக்கு சென்ற காவலாளியாலே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கதிரையில் இருந்தவாறு நித்திரையில் இருந்த அவரை பகல் கடமைக்கு சென்றவர் தட்டி எழுப்பியபோதே அவர் உயிரற்ற சடலமாக காணப்படுவதை அறிந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி