இன்று மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்து 796 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இன்று காலையில் 14 பேரும் அதன் பின்னர் 41 பேருமாக 55 பேர் இனம் காணப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஆறு புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் இன்று இதுவரை 61 பேர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இன்று காலையில் இனம் காணப்பட்டிருந்த 14 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பியிருந்தவர்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தவிர்த்து 41 பேரில் 36 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும், இந்தியாவில் இருந்தி திரும்பிய 3 பேரும், பங்களாதேஷில் இருந்து திரும்பிய மேலும் ஒருவரும், துபாயில் இருந்து திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று 3 பேர் குணமடைந்துள்ளதையடுத்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குவைத் நாட்டடில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய நிலையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் ஜூன்-1 உயிரிழிந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை