இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாலுமி ஒருவருடன் தொடர்புடையவர்கள் என இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 154 பேரின் பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி வீதியில் வசிக்கும் ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று ஏதும் இல்லை என விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியது. இதையடுத்து ஜிந்துப்பிட்டி வீதி உடனடியாக பொதுப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது.
தொற்று உறுதியான நபரின் குடும்பத்தவர்கள் 10 பேர் உள்ளிட்ட 154 பேர் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த பீ.சீ.ஆர். பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான பீ.சீ.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், மேலும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் கொழும்பு மாநகரசபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யூ கே.சந்திரபால தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு