வட மாகாணத்தில் அதிகரித்துவரும் பாரவூர்திகளால் ஏற்படுத்தப்படும் தவிர்க்கப்படக்கூடிய உயிரிழப்புக்கள் குறித்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுனர்கள் இணைந்து குறித்த அறிக்கையினை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் விபத்துக்களினால் அதிகளவான மரணங்கள் பதிவாகிவரும் நிலையில், அவற்றை தவிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடி்ககைகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மக்களைப்பீதிக்குள்ளாக்கும் பாரவூர்திகளின் வீதி ஒழுங்குகளை பின்பற்றாத செலுத்துகை பல பெறுமதியான உயிர்களை நொடிப்பொழுதில் காவுகொண்டும் பலரை நிரந்தர ஊனமாக்கியும் சமூகத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதை மிகப் பாரதூரமான விடயமாக கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய நிபணர்களாகிய நாம் கருதுவதோடு சம்மந்தப்பட்ட தரப்புக்களை தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதோடு அவர்களை நேரில் சந்தித்து எமது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்கு தயாராகி வருகின்றோம்.
இதற்குரிய நடவடிக்கைகள் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் வலியுத்துவதோடு உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்களை சுட்டிக்காட்டுவதுடன் தூரநோக்கில் சட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களையும் வீதி ஒழுங்கில் ஏற்படுத்த வேண்டிய கண்காணிப்பு விடயங்களையும் இங்கு பரிந்துரை செய்கின்றோம்.
நாம் மேற்சொன்ன விடயங்களுக்கு ஆதாரமாக எமது வைத்தியசாலையில் திரட்டப்பட்ட சில புள்ளி விபரங்களை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இவ்விபத்துக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்க இருக்கின்றோம்.
1. அரச அதிபர்
2. பொலிஸ் உயர் அதிகாரி
3. கௌரவ வடக்கின் ஆளுநர்
எமது இந்த முயற்சிக்கு பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் பொறுப்புடன் தங்களின் பூரண பங்களிப்பினை வழங்குவார்களென எதிர்பார்க்கின்றோம்.
1. துரிதமாக மேற்கொள்ள வேண்டிய மிகவும் நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள்.
A. நடைமுறையிலுள்ள வீதி ஒழுங்கு சட்ட விதிகளை இறுக்கமாக கடைப்பிடித்தல்.
i. பாரவூர்திகளின் நடைமுறையில் இருக்கும் வேகக்கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் நடைமுறைப்படுத்தலும் கண்காணித்தலும்.
ii. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை பொறுப்புணர்வுடன் உறுதிசெய்தல் வேண்டும்.
iii. பாரவூர்களின் முகப்பு விளக்குகள் இயங்குநிலையில் இருப்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
iv. போக்குவரத்துப் பொலிசாரின் சாலைப்பரிசோதனைகள் 'விபத்தினை தடுக்கும்' நோக்குடன் அதிகர்pக்கப்பட வேண்டும்.
v. விபத்து தொடர்பான பூரணமான விசாரணைகளை நீதியான முறையில் பண மற்றும் அரசியல் செல்வாக்கினை புறந்தள்ளி மேற்கொள்ள வேண்டும்.
vi. பொது மக்களால் பதிவு செய்யப்படும் வீதி ஒழுங்கு மீறல் சம்பந்தமான ஒலிஒளிப் பதிவுகளை வீதி ஒழுங்கு மீறும் ஊர்திகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படும் பொறிமுறை ஒன்றை உருவாக்குதல் வேண்டும்.
vii. பாரவூர்திகள் நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கான குறித்த நேர அட்டவணை ஒன்றினை வகுத்துக்கொள்ளல்.
viii. இரவு வேளையில் வாகனத்தரிப்பின் போது தரிப்பு விளக்குகள் ஒளிரப்படல் வேண்டும்.
B. அதிகளவில் விபத்துக்கள் நடைபெற்ற இடங்களை அடையாங்கண்டு அவற்றிற்கு அபாய அடையாளமிடுதல்.
C. நெடுங்சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் போது அதற்குரிய தரிப்பிடங்களிலோ அல்லது பாதையிலிருந்து விலகி நிறுத்தப்படல் வேண்டும்.
D. வீதி ஒழுங்கு சட்டவிதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படல் வேண்டும்.
E. சாரதிகளுக்கிடையிலான போட்டிகள் நிறுத்தப்படல் வேண்டும்.
F. இனங்காணப்படும் இடங்களில் வீதி விளக்குகள் நிறுவப்பட வேண்டும்.
G. கால்நடைகளை வீதிகளில் உலாவவிடும் உரிமையாளர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்.
2. உரிய தரப்பினருடன் ஆராய்ந்து நீண்ட கால வீதிப் போக்குவரத்து பாதுகாப்புக்கான நடைமுறைகளை மேற்கொள்ளுதல்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி