அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இன்று புதன்கிழமை 30 இலட்சத்தைக் கடந்தது.
வொஷிங்டன் - எவரெட்டில் கடந்த ஜனவரி - 21-ஆம் திகதி முதல் தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டு 6 மாதங்களுக்குள் அங்கு தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 3 மில்லியன் என்ற மிகப் பெரிய எண்ணிக்கையை கடந்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமையும் அமெரிக்காவில் 60 ஆயிரத்து 21 புதிய தொற்று நோயாளா்கள் பதிவாகினர்.
அண்மைக்காலங்களில் தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று நோயாளா்கள் அமெரிக்காவில் பதிவாகிவருகிறனா். இந்நிலையில் அங்கு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற செனட் விசாரணையில் சாட்சியமளித்த அமெரிக்க தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தின் இயக்குனா் டாக்டர் அந்தோனி பாசி, அமெரிக்கா தவறான திசையில் செல்வதாகவும் அங்கு விரைவில் தினசரி தொற்று நோயாளா் எண்ணிக்கை ஒரு இலட்சம் என்ற இலக்கை எட்டலாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா