பொலன்னறுவ மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை, அரச வங்கி ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கந்தகாடு போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் மூலம் பொலன்னறுவ மாவட்டம் லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் குறித்த தொற்றாளர் இனம் காணப்பட்டிருந்தார்.
குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் கடமையாற்றிய பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 60 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போதே குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டதாக வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பாலத்த பண்டார குறிப்பிட்டார்.இதையடுத்து உடனடியாக குறித்த பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து அவரிடம் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபை மற்றும் அரச வங்கி ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு இனம் காணப்பட்ட புதிய தொற்றாளர் குறித்த பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றியுள்ளார். அவருடன் சேவையாற்றியவர்களையும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை