பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் மனைவி மைக்கேல் போல்சனாரோ மற்றும் பிரேசில் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மார்கோஸ் பொன்டெஸ் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் முதல் பெண்மணி 38 வயதான மைக்கேல் போல்சனாரோ சீரான உடல் நிலையுடன் உள்ளார். அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என ஜனாதிபதி அலுவலகம் நேற்று வியாழக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி போல்சனாரோவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவரது மனைவி மற்றும் அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் “நான் நன்றாக இருக்கிறேன், சளி மற்றும் தலைவலியின் சில அறிகுறிகள் உள்ளன. விரைவில் தொற்றிலிருந்து மீண்டு வருவேன்” என நேற்று வெளியிட்ட ருவிட்டர் செய்தியில் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரேசில் குடியுரிமை அமைச்சர் ஓனிக்ஸ் லோரென்சோனி, கல்வி அமைச்சா் மில்டன் ரிபேரோ மற்றும் உள்ளிட்ட பல அமைச்சர்கள், அவா்களின் உதவியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது வீட்டிலேயே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக கொரோனா தொற்று நோயாளா்களைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. இங்கு இதுவரை 25 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் கொரோனா வைரைஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 ஆயிரத்துக்கும் அதகமானவர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்